பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு(13 ஜூலை 2025)
திருப்பலி முன்னுரை
இன்று பொதுக்காலத்தின் 15ம் வாரமாகும். நல்ல சமாரியனிடமிருந்து தியாக மனநிலையை பெற்று வாழ திரு அவை எம்மை அழைக்கின்றது.
ஆண்டவரின் குரலுக்கு செவிகொடுத்து, அவரது கட்டளைகளை கடைப்பிடித்து, நிறைவேற்றுமாறு இறைவார்த்தை உன் வாயில், இதயத்தில் உள்ளது என்றுரைக்கின்றது முதல் வாசகம். படைக்கப்பட்ட அனைத்திற்கும் ஆண்டவர் இயேசுவே தலைப்பேறு, இவர் வழியாகவே அனைத்தும் தந்தை கடவுளோடு இணைக்கப்பட்டன எனக்கூறுகின்றது இரண்டாம் வாசகம். லூக்கா நற்செய்தியில் நல்ல சமாரியன் உவமையை எடுத்துக்கூறி அயலவரை அன்பு செய்ய அழைக்கின்றார் இயேசுக்கிறிஸ்து.
தேவையிலிருப்போருக்கு நாம் ஆற்றும் சேவையும், உடனிருப்பும் இறைவனுடன் எம்மை மிக நெருக்கமாக இணைக்கின்றது என்பதை உணர்ந்தவர்களாக தியாகம், அன்பு, உதவி செய்யும் மனநிலையை எமக்கருள வேண்டி தொடரும் திருப்பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
முதல் வாசகம்
நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 10-14
மோசே மக்களை நோக்கிக் கூறியது:
உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்டநூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி. உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு.
ஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை; உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை. ‘நாம் அதைக் கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார்’ என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை. ‘நாம் அதைக் கேட்டு நிறைவேற்றுமாறு, நமக்காக யார் கடல் கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார்’ என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை. ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 69: 13. 16. 29-30. 35ab,36 (பல்லவி: 32b)
பல்லவி: கடவுளை நாடித் தேடுவோரே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.
13ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். – பல்லவி
16ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். – பல்லவி
29எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக!30கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். – பல்லவி
35abகடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; 36ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். – பல்லவி
இரண்டாம் வாசகம்
அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-20
இயேசு கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பு அனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன.
திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர்வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 6: 63b, 68b
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
எனக்கு அடுத்திருப்பவர் யார்?
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37
அக்காலத்தில்
திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்று எழுதியுள்ளது” என்றார். இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்றார்.
அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை:
“ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கம் விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக்கொண்டார். மறு நாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’ என்றார்.
கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார். அதற்குத் திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று கூறினார்.
– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுக்கள்
- இறைவா ! திரு அவையை வழிநடத்தும் திருப்பணியாளர்கள் உம் மந்தைகளை முழு உள்ளத்தோடும், முழு ஆன்மாவோடும் அன்பு செய்து உம்மை நோக்கி அழைத்து வந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- “அவர்கள் என்னை நோக்கி மன்றாடும் போது அவர்களுக்கு பதிலளிப்பேன்” என மொழிந்த இறைவா! நாங்கள் செபத்தில் நிலைத்திருக்கவும், எவ்வித பாகுபாடுமின்றி பிறரன்புப் பணிகளில் ஈடுபடவும், நல் மனத்தை எமக்கருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- வார்த்தையால் அனைத்தையும் படைத்தவரே! உமது வார்த்தை எங்கள் இதயத்தில் எங்கள் வாயில் இருக்கின்றது என்பதை உணர்ந்து அதற்கு செயல்வடிவம் தந்து உமக்குகந்த மக்களாக நாங்கள் வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- நலம் தருபவரே! உடல், உள்ள நோய்களால் அவதியுறும் எம் அயலவரைக் கண்டு அவர்களது தேவையை அறிந்து செயல்படும் நல்ல சமாரியர்களாக நாங்கள் வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.