பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு (15 செப்டம்பர் 2024)
திருப்பலி முன்னுரை
கடவுளின் விருப்பத்திற்கேற்ப எமது வாழ்வை அமைத்துக்கொள்வதால் கிறிஸ்துவின் சீடராகின்றோம் எனும் சிந்தனையை பொதுக்காலத்தின் 24ம் வாரமாகிய இன்றைய வாசகங்கள் எமக்கு எடுத்துரைக்கின்றன.
முதல் இறைவாக்கில் கடவுளின் பணியை செய்வதற்காக கிறிஸ்து துன்பங்களையும், சிலுவைச்சாவையும் ஏற்கப்போகின்றார் என்பதை எசாயா இறைவாக்கினர் முன்னறிவிப்பதையும், இரண்டாம் இறைவாக்கில் நடைமுறை வாழ்க்கையில் நம்பிக்கையும், நற்செயல்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென புனித யாக்கோபு எடுத்துக் கூறுவதையும் மாற்கு நற்செய்தியில் புனித பேதுரு “நீர் மெசியா” என இயேசுவிடம் அறிக்கையிடுவதையும் வாசிக்க கேட்போம்.
நற்கருணை பேழையில் எம்மோடு உறவாட காத்திருக்கும் இயேசுக்கிறிஸ்துவை நாம் அறிந்து, அவரே கடவுள் என அறிக்கையிடவும், அவரைப் பின்பற்றி வாழவும் வரம் வேண்டி தொடரும் திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்.
முதல் வாசகம்
அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 5-9 a
ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவும் இல்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன். நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்; என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும். இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணை நிற்கின்றார்; நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்?
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 116: 1-2. 3-4. 5-6. 8-9 (பல்லவி: 9)
பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
1 ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்; ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார். 2 அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார். – பல்லவி
3 சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன. பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக்கொண்டன; துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன. 4 நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்; ‘ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்’ என்று கெஞ்சினேன். – பல்லவி
5 ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்; நம் கடவுள் இரக்கம் உள்ளவர். 6 எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்; நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார். – பல்லவி
8 என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்; என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார். 9 உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன். – பல்லவி
இரண்டாம் வாசகம்
நம்பிக்கை செயல் வடிவம் பெறாவிட்டால், தன்னிலே உயிரற்றதாய் இருக்கும்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18
என் சகோதரர் சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச் சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டா விட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, “நலமே சென்று வாருங்கள்; குளிர்காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக்கொள்ளுங்கள்” என்பாரென்றால் அதனால் பயன் என்ன? அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.
ஆனால், “ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன” என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்: செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
கலா 6: 14
அல்லேலூயா, அல்லேலூயா! நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மானிடமகன் பலவாறு துன்பப்பட வேண்டும்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-35
அக்காலத்தில்
இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் அவரிடம், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள். “ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா” என்று உரைத்தார். தம்மைப் பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். “மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்” என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார்.
பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்துப் பேதுருவிடம், “என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்று கடிந்து கொண்டார். பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்” என்றார்.
– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
- திரு அவையில் திருப்பணியாளர்கள் அனைவரது ஆன்மீக வாழ்வை நீர் நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- இலத்திரனியல், நுண்மதி தொடர்பூடகங்களுடன் வளரும் எம் பிள்ளைகளை நாம் அறிவுத்தெழிவோடும், விழிப்போடும் காத்திருந்து நல்வழியில் வளர்த்திட வரமருளவேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
- அன்பின் இறைவா! நற்கருணை உட்கொள்வதன் மூலம் கிறிஸ்துவை நாம் அனுபவபூர்வமாக உணர்ந்து அவரை பிறருக்கு அறிமுகப்படுத்த வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- கணவர், மனைவியர் தமக்களிக்கப்பட்ட பொறுப்புக்கள், கடமைகளை நிறைவாகச் செய்து, கிறிஸ்துவையும், திருச்சபையையும் அன்பு செய்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.