பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 3ஆம்  ஞாயிறு 

திருப்பலி முன்னுரை

இன்று பொதுக்காலத்தின் 3ம் ஞாயிறாகும். கடவுளின் வார்த்தையைக் கேட்டு அவரைப் பின்பற்றி வாழ தடையாயிருப்பவற்றை இனம் கண்டு அவற்றைக் கைவிட்டு இறைவனின் அன்புப்பிள்ளைகளாக வாழ திருச்சபை எம்மை அழைக்கின்றது.

இன்றைய முதல் இறைவாக்கினிலே யோனா இறைவாக்கினரின் வார்ததையைக் கேட்டு மனம்வருந்திய  நினிவே மக்கள் கடவுளின் அன்பையும், கருணையையும் பெற்றுக்கொண்டதையும், இரண்டாம் இறைவாக்கின் ஊனியல்பு இச்சைகளை விட்டு ஆவிக்குரிய தூய வாழ்வை வாழ கொருந்திய மக்களை புனித பவுல் வலியுறுத்துவதையும், மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் வார்த்தையைக் கேட்டு மனம்மாறி அவரைப்பின்தொடர்ந்த மூன்று திருத்தூதர்களின் அழைப்பைப்பற்றியும் வாசிக்க கேட்போம்.

இயேசுவின் வார்த்தையைக் கேட்டு, சிந்தித்து அதன்படி வாழ தூய ஆவியின் அருளையும், இறைவனின் கருணையையும் வேண்டி தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்

நினிவே மக்கள் தீய வழிகளினின்று விலகினர்.

இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3: 1-5, 10

அந்நாள்களில்

இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், ‘‘நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி” என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்று நாள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்த பின், உரத்த குரலில், ‘‘இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்” என்று அறிவித்தார்.

நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர், சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர்.

கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள் மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 25: 4-5. 6-7bc. 8-9 

பல்லவி: ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்.

4ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; 5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். – பல்லவி

6ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7bc உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில் ஆண்டவரே நீரே நல்லவர். – பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். – பல்லவி

இரண்டாம் வாசகம்

இந்த உலக அமைப்பு கடந்துபோகக் கூடியது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 29-31

அன்பர்களே, நான் சொல்வது இதுவே: இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர்போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர்போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பதுபோல் நெடுநாள் இராது.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 14-20

யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார்.

அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.

– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

  1. திருச்சபையின் திருப்பணியாளர்கள் தம் முன்மாதிரிகையான போதனை வாழ்வின் வழியாக முழுத்திருச்சபையினையும் வழிநடத்தி, இறையாட்சிக்கு அழைத்துச்செல்ல வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. ஆண்டவரே! உம்மை மறந்து உலக செல்வங்களின் நேரத்தை செலவழித்தமைக்காக மனம் வருந்துகின்றோம். உம் பாதைகளை நான் அறிந்து உம் வழியில் நடக்க எனக்கு கற்பித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. எம் பிள்ளைகள் மத்தியில் இறையழைத்தலின் முக்கியத்தை விதைத்திடவும், நன்மை தீமையை பகுத்தறிந்திடவும் அவர்களுக்கு தூய ஆவியாரின் வரங்களை பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. கிறிஸ்தவர்களாகிய எமது வாழ்வு இறைவன் குடிகொள்ளும் உன்னத இல்லங்கள் என்பதை மனதில் இருத்தியவர்களாக ஆவிக்குரிய தூய வாழ்வு வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.