The Solemnity of the Ascension of the Lord

ஆண்டவரின் விண்ணேற்றம்1

2023.05.21

 

முன்னுரை

 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள். இன்று இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா. எப்பெயருக்கும் மேலாக உயர்த்தப்பட்டு, தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கும் நம் ஆண்டவரின் சந்நிதானத்தில் ஒன்று கூடியுள்ளோம்.

 

இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக சீடர்களுக்குத் தோன்றி,  இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார். பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார். அத்தோடு தம் திருத்தூதர்களிடம்,  எருசலேமை விட்டு நீங்க வேண்டாம் எனவும் தன்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருக்கும்படியும் கேட்டுக்கொள்கின்றார். உண்மையிலேயே இயேசுவின் பிரசன்னமும், வாக்குறுதிகளும் கவலையோடு இருந்த திருத்தூதர் களுக்கு மட்டுமல்ல இன்று நமக்கும் நம்பிக்கையும் சக்தியையும் தருகின்றன.

 

ஆகவே நாம் அனைவரும் இயேசுவின் அருட்பிரசன்னத்திலும்,  அவருடைய உடனிருப்பிலும், அவருடைய வார்த்தையிலும், வாக்குறுதிகளிலும் நம்பிக்கை கொண்டு வாழுவோம். அத்தோடு நம் வாழ்வாலும், பணியாலும் இயேசுவின் நற்செய்தியைப் பறைசாற்றுவோம். இறையாசீர் பெற்றுப் புதுவாழ்வு வாழத் தொடரும் பலியில் வரம் கேட்டுச் செபிப்போம்.

 

முதல் வாசகம்

 

எங்கள் கண்கள் முன்பாக இயேசு மேலே எடுத்துக் கொள்ளப்பட்டார்.

 

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1:1-11

 

தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன். இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப்பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார்.

 

அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், “நீங்கள் எருசலேமை விட்டு நீங்க வேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்” என்று கூறினார்.

 

பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம்,  “ஆண்டவரே,  இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்துவைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது            வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார்.

 

இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப் பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும்போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, “கலிலேயரே,  நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்” என்றனர்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல் திபா 47:1-2, 5-8

 

பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.

 

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே.
பல்லவி

 

ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்.
பல்லவி

 

ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிற இனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார்.                                                                                                                      பல்லவி

 

இரண்டாம் வாசகம்

 

அவரை விண்ணுகில் தமது வலப்பக்கத்தில் அமர்த்தினார்.

 

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1:17-23

 

சகோதரர் சகோதரிகளே,

 

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக!

 

கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும்,  இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்றும்,  அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வற்றது,  மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமைமிக்க தம் ஆற்றலைக் கிறிஸ்துவிடம் செயல்படுத்தி,  இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்த்தினார். அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்;  இவ்வுலகில் மட்டும் அல்ல; வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்.

 

அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச்செய்து,  அனைத்துக்கும் மேலாக அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   மத்  28:19,20

 

அல்லேலூயா,  அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்,  என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

 

நற்செய்தி வாசகம்

 

விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.

 

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20

 

அக்காலத்தில்

 

பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

மன்றாட்டுக்கள்

 

1. அன்புத் தந்தையே இறைவா! தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றை உம் திருமகன் இயேசு அறிவுறுத்தியது போல, சவால்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்கும், சீரிய வழிகாட்டுதல்களையும், ஞானத்தையும், அறிவுரைகளையும் நீரே வழங்கி, நற்செய்தியைத் தம் வாழ்வாலும், பணியாலும் அறிவிக்கும் ஆற்றலை அவா்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. அனைத்துலகின் வேந்தரே இறைவா! உமது திருமகன் இயேசு வழியாக நீர் கட்டியெழுப்பிய திரு அவை உலகில் வாழும் அனைவருக்கும் ஆற்றலாகவும், ஆறுதலாகவும், ஆசீர்வாதமாகவும் இருந்து செயற்படவும், நற்செய்தியை வாழ்வாலும், பணியாலும் எடுத்துரைக்கவும் ஞானத்தை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3. உன்னதரான தந்தையே! உலகில் ஏற்படும் மாற்றங்கள் எங்கள் எதிர்நோக்கிற்கும் நம்பிக்கைக்கும், அச்சுறுத்தலாக அமைந்து, எங்கள் உள்ளங்களைக் கலக்கமடையச் செய்கின்றபோது நாம் நிலைகுலைந்து போகாமல், உமது வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4. அன்புத் தந்தையே இறைவா! எம் இளைஞர்கள், இளம் பெண்கள் அனைவரும், இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கொடுத்தது போன்ற ஆற்றலையும், சக்தியையும் பெற்று தாம் வாழும் சமுதாயத்திற்கு நன்மை செய்கின்றவர்களாகவும், உமது நற்செய்தியின் தூதுவர்களாகவும் செயற்படும் சக்தியை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.